சென்னை, செப். 10- சென்னை பட்டினப்பாக்கத்தில் 25,55 ஏக்கர் நிலத்தில் ரூ.1,200 கோடியில் தலைமை செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தலைமைச்செயலகம் அமைந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற 9 மீனவ கிராம மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அரசு அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
சென்னையில் உள்ள ‘புனித’ ஜார்ஜ் கோட்டையில் தற்போது தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஜார்ஜ் கோட்டை கிழக்கிந்திய கம்பெனியால் 1640ஆம் ஆண்டு சென்னையில் வணிக செயல்பாட்டு மய்யத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1644ஆம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டது.
1652இல் பிரசிடென்சி நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையிடமாக திகழ்ந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ 400 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் நிர்வாக மய்யமாகவும், மாநிலத்தின் ஆட்சி பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கிவருகிறது.
சுமார் 107 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த வளாகத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தலைமைச் செயலகத்தின் பயன்பாட்டிற்காக சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. மீதமுள்ள நிலப்பரப்பு இந்திய பாதுகாப்பு துறை மற்றும் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதால், இந்த வளாகத்தை விரிவுபடுத்தவோ, மேம்படுத்தவோ முடியவில்லை.
புதிய தலைமை செயலகம் பட்டினப்பாக்கத்தில் தான் அமைக்க விஜய் தலைமையிலான தவெக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தாலும், இதுபற்றி கடந்த வாரம் 110ஆவது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டபோதே, சட்டப்பேரவையில் எந்த இடத்தில் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படுகிறது என்று அறிவிக்கவில்லை.
மீனவ குப்பங்களுக்கு ஆபத்து
சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகம் கட்ட தவெக அரசு முடிவு செய்துள்ளது. இங்கு பட்டினப்பாக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமிங் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் ஆக மொத்தம் 9 மீனவ கிராமங்கள் உள்ளன.
இங்கு ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசிக்கின்றனர். தலைமைச்செயலகம் அமைந்தால் தங்கள் வாழ்வாதாரம் அடியோடு பறிக்கப்படும் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்போது, அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் அடுத்த நடவடிக்கை குறித்து மீனவ கிராம தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
புதிய தலைமைச் செயலகத்தில் இருந்து மெரினாவில் உள்ள கலங்கரைவிளக்கம் வரை கடற்கரையை அழகுபடுத்துகிறோம் என்று கூறி மீனவ கிராமங்களையும், குப்பங்களையும் அரசே ஆக்கிரமித்துக் கொள்ளும், பூர்வகுடிகளான தங்களை தாய் பூமியில் இருந்து அரசு அப்புறப்படுத்திவிடும் என்ற பெரும் அச்சம் மீனவ மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளதாக அப்பகுதி மீனவ தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
.png)
13 hours ago
1




English (US) ·